2016 மற்றும் 2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள் 8000 பேர் நாடளாவிய ரீதியிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இம் மாதம் 3ம் திகதியிலிருந்து கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். நிட்டம்புவ சாரிபுத்த, மட்டக்களப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியவற்றுக்கு கடந்த 3ஆம் திகதி மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.மகாவலி, ருவன்புர மற்றும் பேராதெனிய ஆகிய கல்வியியற் கல்லூரிகளுக்கு கடந்த 15ம் திகதி மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். அதேபோன்று 16ஆம் திகதி வவுனியா, யாழ்ப்பாணம், தர்காநகர் மற்றும் பத்தனை சிறீபாத ஆகிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். மஹரகம மற்றும் ஊவா ஆகியவற்றுக்கு மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

நில்வளா மற்றும் வடமேல் ஆகிய கல்லூரிகளுக்கு இம் மாதம் 24ம் திகதியும், தம்பதெனிய சாரிபுத்ர, ருஹூணு, ஹாபிட்டிகம, பஸ்துண்டர மற்றும் புலதிசிபுர ஆகியவற்றுக்கு எதிர்வரும் 28ம் திகதி மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

இதுவரை காலமும் ஒவ்வொரு வருடமும் 3500 – 4000 மாணவர்களே தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்பட்டனர். எனினும் இம்முறை இரு தொகுதிகளைச் சேர்ந்த 8000 மாணவர்கள் ஒரே தடவையில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் குடிநீர் என்பவற்றுக்காக 430 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.