நெடுங்கேணி வெடுக்குநாரி மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்குத் தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் வெடுக்குநாரி மலையில் பக்தர்கள் ஏறுவதற்கு வசதியாக இரும்பினால் அமைக்கப்பட்ட ஏணிப்படி ஒன்று அப்பகுதி மக்களால் அண்மையில் பொருத்தப்பட்டது.

குறித்த ஏணிப்படி பொருத்தியமைக்கு எதிராகத் தொல்பொருள் திணைக்களத்தால் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் இம்மாத முற்பகுதியில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஆலய நிர்வாகத்தினரை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது குறித்த விடயம் தொடர்பாக வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வர ஆலயத்தின் நிர்வாகம், மற்றும் பூசகரிற்கு எதிராக தொல் பொருட்திணைக்களத்தால் வவுனியா நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்களிற்கு வவுனியா நீதவான் நீதிமன்றால் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு விசாரணைகளிற்காக வவுனியா நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது