இலங்கையர்களின் ஜனநாயக ரீதியான ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை மக்களை அமெரிக்கா வாழ்த்துவதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக ஐக்கிய அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஐக்கிய அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு என்பதற்கு பொருத்தமான வகையில் சுதந்திரமானதும் நீதியானதும் மற்றும் வெளிப்படையானதுமான ஜனாதிபதித் தேர்தலொன்றின் மூலம் இலங்கை அதனது குடியரசின் வலிமை மற்றும் மீளெழுச்சியை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது.

அமைதியான தேர்தலொன்றை ஊக்குவித்தமைக்காக தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் அரச அதிகாரிகளை நாம் பாராட்டுகிறோம்.

உயரிய நல்லாட்சி, விரிவாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக நாட்டின் இறையாண்மைக்கு ஒத்துழைப்பளிப்பதிலும் மற்றும் அனைத்து நாடுகளும் செழிப்படையக்கூடிய இந்து-பசுபிக் பிராந்தியமொன்றை பேணிப் பாதுகாப்பதிலும் புதிய ஜனாதிபதியுடனும் அனைத்து இலங்கை மக்களுடனும் எமது பணியை தொடர்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.