இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆட்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா நேற்று மாலை அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார். இந்த அறிவித்தலின் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ உதவியாளர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர், ஆய்வு கூட உதவியாளர் பதவிகளுக்கான தெரிவுப் பரீட்சைகளிலும், நேர்முகத் தேர்விலும் தோற்றிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நியமனங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சின் செயலாளரினால் பெயர் குறித்து அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஆகஸ்ட், செப்டெம்பர்களில் நடத்தியிருந்தது. எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசட்டையீனம், தொழிற்சங்க போராட்டம் போன்ற காரணங்களால் பரீட்சைகளில் தேறியவர்களுக்கு நியமனங்களை வழங்குவதில் இழுபறி நிலவி வந்தது.

அதன் பின் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நியமனங்களை வழங்குவதற்கான பேரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை காரணமாக பல்கலைக் கழகங்களில் அனைத்து வகையான நியமனங்களையும் இடைநிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் மாத்திரம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நியமனங்கள் கேள்விக்குறியாகியுள்ளது.