யாழ். அரியாலையில், ஆயுதக் கிடங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வீட்டு வளாகத்தில் அகழ்வுப் பணி, இன்று முன்னெடுக்கப்பட்டது.அரியாலை – தபால் கட்டைச் சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றில், இராணுவ முகாம் அமைந்திருந்தது. எனினும், வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அந்த முகாம் அகற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனரென்று குறிப்பிட்டு, தெய்வீகன், அப்பன், கோபி ஆகிய போராளிகள், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியன்று, வவுனியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், குறித்த மூவரும் இந்த வீட்டிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனரென்று தெரியவந்தது. இதையடுத்து, அவ்வீட்டை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாகச் சந்தேகம் வெளியிட்டுள்ள இராணுவத்தினர், அது தொடர்பில் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறும், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இராணுவத்தினரை அறிவித்தலையடுத்து, அந்த ஆயுதக் கிடங்கு தொடர்பில் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் பெற்றுள்ளனர்.

நீதவான் முன்னிலையில், குறித்த வீட்டு வளாகத்தில் ஆயுதக் கிடங்கைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, குறித்த வீட்டில் பல தடவைகள் ஆயுதக் கிடங்கு தொடர்பில் ஆராய்ந்த போதும், எந்தவோர் ஆயுதமும் கிடைக்கப்பெறவில்லையென்று, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.