முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் ஒன்றிணைந்து கடந்த வருடம் 2018.08.02 ஆம் திகதி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளுக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்கச் சென்றபோது, நீண்டநேரம் ஆகியும் திணைக்களத்திற்குள் இருந்த அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காது இருந்த நிலையில் அலுவலகம் சேதமாக்கப்பட்டது.

இவ்வாறு அலுவலகம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, செல்வபுரம் கடற்றொழில் சங்கத் தலைவர் பிரன்சிஸ்சபரி ஜெரோம் திலீபன்,

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் பேதுறுப்பிள்ளை பேரின்பநாதன், கோவிற்குடியிருப்பு மீனவர் சங்கத் தலைவர் மர்சலீன் – மிறாண்டா அன்ரனி, செல்வபுரம் கடற்றொழிலாளர் சங்க பொருளாளர் அரியராசா ஜெயராசன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமேளனங்களின் உப தலைவர் வின்சன்டீபோல் அருள்நாதன்,

ஆகியோர் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ச்சியாக கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் நிலையில், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்ட ஏழு பேரும்,

வழக்கு விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் இன்றும் முன்னிலையானதைத் தொடர்ந்து எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.