இலங்கையின் அனைத்து ஆசிரியர் சபை ஊழியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்காக தேசிய கல்வியற்கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக மேம்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட ´சுபீட்ச தொலைநோக்கு´ என்ற கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட ஞானத்தைக்கொண்ட பிரஜை, அறிவைக் கொண்ட சமூகம் ஒன்றுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர்களின் தொழில் தரத்தை மேம்படுத்துவதற்காக, இலங்கையில் அனைத்து ஆசிரியர் சமூகத்தையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக தேசிய கல்வியற் கல்லூரிகளை பல்கலைக்கழக பிடங்களாக தரம் உயர்த்தி ஆசிரியர்களுக்கான பட்டப்படிப்பு தகுதியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்விசார் மற்றும் உடனடி பணிகளை நிறைவேற்றுவதற்காக கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விசேட குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.