மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட வட்டுப்பித்தான் மடு கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வட்டுப்பித்தான் மடு கிராமம் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் இடம்பெயர்ந்து இன்று வெள்ளிக்கிழமை வட்டுப்பித்தான் மடு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மக்களுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை மேற்கொள்ள மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 168 பேர் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.