ஜேர்மனியிலுள்ள மூன்று தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ஜேர்மனியின் ஸ்ருட்காட் நகரில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் அவர்கள் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ என்ற நுல் அறிமுக விழாவினை நேற்றையதினம் (07.12.2019) நடாத்தியிருந்தன.
இலங்கையர் ஜனநாயக முன்னணி, தமிழ் மரபு அறக்கட்டளை, இலங்கை ஜேர்மன் நட்புறவு கழகம் ஆகியன இணைந்தே இந்நிகழ்வினை நடாத்தியிருந்தன. டொக்டர் சுபாசினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியினருடன் தோழர் ஜெகநாதன் அவர்களின் தலைமையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் ஜெர்மன் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வின் முன்னுரையை தோழர் பவானந்த் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து ஓவியர் சந்துரு அவர்கள் தமிழ் சமூகக் கட்டமைப்பிலுள்ள சிக்கல்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். செந்தமிழ் கோடையிடி குமரன் அவர்கள் நூல் அறிமுகவுரையை வழங்கினார்.
தோழர் ஜெகநாதன் அவர்கள் புலம்பெயர் தமிழர்களின் பண்பாட்டு சிக்கல் என்ற தலைப்பில் ஓர் ஆய்வுரையை வழங்கினார். தொடர்ந்து தொல். திருமாவளவன் அவர்கள் தமிழ் சமுகச் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நீண்ட உரையினை நிகழ்த்தினார்.
நிகழ்வின்போது தொல். திருமாவளவன், ஓவியர் சந்துரு, சனா ஆகியோர் தோழர்கள் ஜெகநாதன், சந்திரன், பவானந்த் ஆகியோரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். தர்மசீலி அவர்களின் நன்றியுரையுடன் மேற்படி நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.