அனைத்து தேர்தல்களிலும் தேவையற்ற வகையில் களமிறங்கும் வேட்பாளர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பாராளுமன்றத்தினால் அதனுடன் தொடர்புடைய சட்டம் தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். தேர்தல்களின் போது ஏனைய நபர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கவில்லை எனவும் அது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தேவையற்ற முறையில் பொது பணத்தை வீணடிக்கும் வகையில் வேட்பாளர்கள் களமிறங்குவதை தடுப்பதற்காக யோசனை ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் பல தரப்பினரின பங்களிப்புடன் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.