அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது என்பது, ஒரு கண் துடைப்புச் செயலாகும் என்றும் இதனைக்  காலத்தை இழுத்தடிக்கின்ற செயலாகவே கருதுவதாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

ஹட்டனில் நேற்று(11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

“அரசியல் கைதிகளை, அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்ய வேண்டும் என்பது தான், எங்களது கோரிக்கையாக இருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை இதுவரைக்கும் தெற்கின் பெரும்பாலான சிங்களச் சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழ்நிலையிலேயே, தற்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்” என ஞானசார தேரர் கூறியுள்ளார் என்றார்.

மேலும், அவர்களின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்கு, ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற சிந்தனை, ஞானசார தேரருக்கு வந்தது வரவேற்கத்தக்க விடயமாகும் என்றும்  இந்தச் சிந்தனை, தெற்கு சமூகத்தினருக்கும் வரவேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

“இது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையாகும். இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை, அரசியல் ரீதியாகவே நோக்க வேண்டும். இதனைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கண்கொண்டு பார்க்கக் கூடாது என்பதுதான், எங்களது கோரிக்கையாக இருக்கின்றது” என்றார்.

“இப்போது ஓரளவுக்கு ஞானசார தேரர்,  அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றார். கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால், அதனை ஆராய்வதற்கு ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், ஆணைக்குழுக்களை நியமிப்பது ஒரு கண்துடைப்புச் செயலாகும். கடந்த காலங்களில், எத்தனையோ ஆணைக்குழுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆணைக்குழுக்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள், எந்த அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவில்லை. இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாகவே நாங்கள் கருதுகின்றோம்” என்றார்.

“எனவே, அரசியல் தீர்மானம் எடுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும். பயங்கரவாதத் தடை சட்டத்தை வைத்துக்கொண்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது சாத்தியமற்ற செயல்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அரசியல் கைதிகள் அனைவரையும் அரசியல் தீர்மானத்தினூடாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, ஞானசார தேரர், அவரைச் சார்ந்த அமைப்பினர், அதுபோன்று தெற்கின் சிங்கள சமூகம் முன்வைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது” என்றார்.