கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவிற்கமைய அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய அவர் நேற்று இரவு (16) சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (16) கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் குறித்த பெண் அதிகாரி சோடிக்கப்பட்ட கதைகளை தெரிவித்தாக அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார கூறினார்.

இது அந்த பெண் அதிகாரியால் முன்னெடுக்கப்பட்ட தனிப்பட்ட விடயமா? அல்லது அவருக்கு பின்னாள் எவரும் இருந்து இதனை நடத்தினார்களா? என்பதை கண்டறிய தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி மாலை தான் ஒரு குழுவினரால் கடத்தப்பட்டதாகவும் கடத்தியவர்கள் தன்னிடம் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளதாக கூறப்படும் நிஸாந்த சில்வா என்ற பொலிஸ் அதிகாரி குறித்து வினவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு அமைய அது தொடர்பான எந்தவித தகவலும் வெளியாகவில்லை என அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார கூறினார்.

இந்நிலையில் இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் மற்றும் கடத்தப்பட்டதாக கூறும் பெண் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் ஒன்றுக்கொன்று பரஸ்பர முரண்பாடானவை அதேபோல் சந்தேகத்திற்குரியவை என்பதால் அவரை குற்றவியல் தண்டனை சட்டத்தின் 120 ஆம் மற்றும் 190 பிரிவுகளுக்கு அமைய சந்தேக நபராக பெயரிட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக அரச சிரேஸ்ட சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் மூலம் நாட்டுக்கு பாரிய அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அவர் குறித்த பெண்ணுக்கு பிணை வழங்கினால் அவர் நாட்டில் வெளியேற வாய்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனவே சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகள் முடிவடையும்வரை அவருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதாகவும் அரச சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார கூறினார்.

இதன்போது குறிக்கிட்ட சந்தேகநபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும சந்தேக நபருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பிணை வழங்க கூடியவை என்பதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

சந்தேக நபர் விசாரணைகளுக்கு உரியவகையில் ஒத்துழைப்பு வழங்காமையால் தற்போது அவருக்கு பிணை வழங்கினால் அது விசாரணைகளுக்கு தடையாக அமையும் என தெரிவித்த கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதனைவிட அரச சட்டத்தரணியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணை முடிவடையும் வரை குறித்த பெண்ணுக்கு வெளிநாடு செல்வதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீடித்து உத்தரவிட்டார்.

அதேபோல் எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த பெண்ணை அங்கொட மனநல நிருவகத்தில் ஒப்படைத்து மலநல பிசோதனைகளை முன்னெடுக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.