மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது (41) என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிறிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார். அவர் தங்கி இருந்த வீட்டிற்கு முன் வீதியில் இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு 9 மணியளவில் அவர் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.

பின்னர் விசேட தடயவியல் நிபுணத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.