உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரில் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 61 பேரின் விளக்கமறியல் ஜனவரி 14 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரரெலியாவில் உள்ள தௌஹீத் தௌபீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஜனவரி 07ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

இவர்களில் குறித்த சந்தேக நபர்களிடம் சைக்கிள் வாங்கியது தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.