தங்களது அலைபேசிகளுக்கு இந்தக் காலப்பகுதிகளில் கிடைக்கப்பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் அலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு இந்தக் காலப்பகுதியில் விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறுந்தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

அறியப்படாத இலக்கங்களிலிருந்து இவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இவ்வாறாக வரும் குறுந்தகவல்களில் பெறுமதியான பரிசில்கள் வாடிக்கையாள்கள் வென்றிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

அந்த பெறுமதியான பரிசை பெற்றுக்கொள்ள ஒரு தொகை பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறான குறுந்தகவல்கள் கிடைக்கப்பெறுவோர் தமது தனிப்பட்ட விவரங்களை வழங்க வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவர்கள் வழங்கும் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணம் வைப்பு செய்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான குறுந்தகவல்கள் தொடர்பில் தமது சங்கத்துக்கு அறிவிக்குமாறும் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.