கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமாரை, இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி.சிவகுமார் உத்தரவிட்டார்.

சந்தேகநபர், நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, மேற்படி உத்தரவை நீதவான் பிறப்பித்தார். திருக்கோவில் – ஆலையடிவேம்பு பிரதேசங்களில்,2006ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை, 7 பேர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக,

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால், பாதுகாப்பு அமைச்சு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய,

குறித்த சந்தேகநபரான இனிய பாரதிக்கு எதிராக, 06 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, ஆறு வழக்குகளின் கீழ் அவர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிலரை ஆட்கடத்தலில் ஈடுபடுத்தியமை, அதற்கு ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மேற்படி வழக்குகள் இனியபாரதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.