தாய் வெளியில் சென்றிருந்த போது, 17 வயது மகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவ​த்தை அடுத்து, மகளை இழந்த சோகத்தில், தன்னை மாய்த்துக்கொள்ள முயற்சித்த தாயைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – கொக்குவில், அரசடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில், உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் 17 வயதான மஹேஸ்வரன் கஜானி என்ற மாணவியே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவ தினமான இன்று (09), தனது தாய் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதை அடுத்து, தனது பாட்டியுடன் வீட்டில் இருந்துள்ள குறித்த மாணவி, நீண்ட நேரமாக அலைபேசியில் அழுதவாறு உரையாடிக் கொண்டிருந்ததாகவும் சில நிமிடங்களுக்குப் பின்னர், ​பேத்தி எங்கே எனப் பாட்டி தேடியபோது, குளியலறைக்குள் அவர் சடலமாகக் கிடந்ததாகவும், பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிஸாருக்கும் தாயாருக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ வீட்டுக்கு விரைந்துள்ள கொக்குவில் பொலிஸார், மரண விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் போது, மகளை இந்த சோகத்தில், தாயும் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தபோது, பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காதல் விவகாரமே, குறித்த மாணவியின் மரணத்துக்குக் காரணமெனத் தெரியவந்துள்ளதாகக் கூறிய பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.