இந்தியாவிலுள்ள முகாம்களில் வசித்துவரும் இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படல் வேண்டும் என்று, இந்தியாவிலுள்ள இலங்கையர்களின் பிரதிநிதியாக, இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா ​வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் இருந்து மகாத்மா காந்தி இந்தியா திரும்பிய நாளான ஜனவரி 9ஆம் திகதி, சர்வதேசமளவில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில், நேற்று (09), ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில் வாழும் 5 பிரதான இனங்களில், இந்திய அடையாளத்துடன் வாழ்பவர்களே மலையகத் தமிழர்கள் என்றும் இந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்தாலும், இலங்கையில்தான் இந்தியத் தமிழர்கள் வாழ்கின்றன் என்றும் கூறினார்.

அவர்களே மலையகத் தமிழர்கள் என்றும் இந்த மலையகத் தமிழர்களில் 30 ஆயிரம் பேர், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொள்ள முடியும் என்று தீர்ப்பு ​​வெளிவந்துள்ள நிலையில், இந்திய அரசாங்கம், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்தியக் குடியுரிமையை வழங்கவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் அகதிகளின் கோரிக்கை மனுவையும் உதவி இந்திய உயர்ஸதாணிகர் திரேந்தர்சிங்கிடம் கையளித்தார்.