அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்களை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அஸர்பைஜானில் இந்நாட்டு தூதரகம் ஒன்று இல்லாத காரணத்தால் தெஹ்ரானில் அமைந்துள்ள இந்நாட்டு தூதரகத்தின் உதவியுடன் அந்நாட்டுடன் அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேறகொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அஸர்பைஜானின் பக்கு தலைநகரில் அமைந்துள்ள காஸ்பியன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று இலங்கை மாணவிகள் விஷ வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்தனர்.

குறித்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியின் கீழ் மாடியில் தீ பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் புகையினை சுவாசித்ததில் மூன்று மாணவிகளும் மயக்கமுற்றுள்ளனர். பின்னர் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

கடுவலை மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 21, 23 மற்றும் 25 வயதுடைய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த மாணவிகளின் சடலங்களை எதிர்வரும் சில தினங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் அஸர்பைஜான் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.