எம்பிலிப்பிட்டிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நீதிச்சேவைகள் ஆணைக்குழுவால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் கொழும்பு குற்றவியல் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய, கடந்த 19ம் திகதி பிற்பகல் 5 மணித்தியாலங்கள் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக கொழும்பு குற்றவியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பத்மினி எம். ரணவக்க மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து வாக்குமூலங்களை பதியுமாறு சட்டமா அதிபர் கடந்த 16 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.