ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன, அரசியலில் ஏற்பட்ட விரக்தி காரணமாகவே தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வெளிநாடு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதத்தை கையளித்திருந்தார். ஜனாதிபதி சட்டத்தரணியான ஜயம்பதி விக்கிரமரத்ன 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களில் அங்கம் வகித்த அவர், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் அங்கம் வகித்திருந்தார்.

கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அப் பதவிக்கு சமன் ரத்னபிரிய பெயரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலர் அகிலவிராஜ் காரியவசம் உறுதிப்படுத்தியிருந்தார்.