சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, மே 6ஆம் திகதி வரை மீண்டும் தடுப்புக் காவலில் வைக்குமாறு, கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை மீண்டும் மே 6ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள், பொலிஸாரால் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு, சந்தேகநபர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் வைத்து கடந்த வருடம் கைதான குறித்த சந்தேக நபர், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இருந்த போதிலும், தற்போது மீண்டும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டு விசாரணைக்காக கல்முனை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்புத் தரப்பால் கைது செய்யப்பட்டிருந்தனர்.