கொழும்பிலிருந்து பயணித்த லொறியொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி லொறியொன்று பயணித்த நிலையில் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாரதி லொறியை வீதியோரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளதாகவும் இதன்போது லொறியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக லொறி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் லொறியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சாரதி தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் திருகோணமலை, மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (49 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.