“13 ஐ ஒழிப்பதே கோத்தாவின் நோக்கம்!”
புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , சமகால அரசியல் நிலை குறித்து ‘சஞ்சீவிக்காக’ வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது.
கே: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உங்களது கட்சி சார்பில் நீங்களும், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபனும் களமிறங்கவுள்ளீர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கஜதீபனுக்கு ஆசனம் வழங்கியமை தொடர்பில் தங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உங்களது கட்சிக்குள் என்னதான் நடக்கின்றது?ப: – கஜதீபன் கடந்த 6 ஆண்டுகளாக கட்சிக்காக விசுவாசமாக வேலை செய்கின்றார். மக்கள் மத்தியில் அவருக்குச் செல்வாக்கு இருக்கின்றது. அவரை நியமிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அண்மையில் எமது கட்சியின் நெருங்கிய ஆதரவாளர்களுடனான கூட்டம் எனது வீட்டில் நடைபெற்றது. கஜதீபனது பெயரை எல்லோரும் ஏகமனதாகப் பிரேரித்தார்கள். இதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்வோம். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் என்னிடம் தனிப்பட்ட முறையில் கஜதீபனையே நியமிக்குமாறு கோரியுள்ளார்கள்.
பேசுவது மட்டுமே வேலையல்ல!
கே: 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு தடவை மாத்திரமே நீங்கள் பேசியதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது. உங்களுக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லையா? அல்லது நீங்கள் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டீர்களா?
ப -: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றத்தில் பேசுவது மாத்திரம்தான் கடமையல்ல. நாடாளுமன்றத்துக்குள்ளேயே வெவ்வேறு கடமைகள், சபா மண்டபத்துக்கு வெளியில் உள்ளன. அரசமைப்பு பேரவையின் நடவடிக்கைக் குழுவால் நியமிக்கப்பட்ட 6 உபகுழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருந்து, அந்தச் செயற்பாடுகளைச் செய்தேன்.
நாடாளுமன்றத்தில் உள்ள வேறு குழுக்களிலும் செயலாற்றினேன். உதாரணமாக, உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழுவில் செயலாற்றுகின்றேன்.
இவற்றுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் பேச நேரம் ஒதுக்குவது, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒவ்வொரு விவாதத்திலும் சராசரியாக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும். இந்த 45 நிமிடத்தை 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இப்போது 14 உறுப்பினர்களும் தம்மிடையே பங்கிடவேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் முக்கிய மான விடயங்களில் பேசுவதற்கு விரும்பி நேரம் கேட்பது வழக்கம். அப்போது சம்பந்தன் அண்ணையும், சேனாதி அண்ணை போன்றவர்களும் அதில் பேசுகின்றபோது அவர்கள் மேலதிகமான நேரங்களை எடுத்துவிடுவார்கள். எங்களுடைய நேரங்கள் வெட்டப்படும். அப்படியான நேரங்களில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.
ஒரே ஒரு தடவை பேசியது என்ற விடயம் 2019ஆம் ஆண்டில் மாத்திரம் சொல்லப்படுகின்றது. அந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மிகக் குழப்பம் நிறைந்த ஆண்டாகவும், இரண்டு அல்லது மூன்று தடவைகள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட ஆண்டாகவும் அமைகின்றது.
நாடாளுமன்றத்தில் 1994ஆம் ஆண்டிலிருந்து நான் பேசிய விடயங்கள், எத்தனை தடவை பேசியிருக்கின்றேன் என்பவற்றை எடுத்துப் பார்த்தால் நாடாளுமன்றத்தில் எனது பங்களிப்பின் முக்கியத்துவம் தெரியும். வசதியாக இருந்தால், நான் அவற்றை எடுத்து விரைவில் வெளியிடுவேன்.
புலிகள் தடுத்தார்களா?
கே -: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஆயுதப் போர் முடிவுக்கு வந்த பின்னரே கூட்டமைப்பில் புளொட் இணைந்து கொண்டது. கூட்டமைப்பில் நீங்கள் இணைவதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்திருந்தார்களா?
ப – :நிச்சயமாக இல்லை. 2004ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எங்களிடம் கோரினர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் நேரடிப் பிரதிநிதி, எங்கள் கட்சியின் ஆர்.ஆர். (ராகவன்) உடன் வவுனியாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
‘‘ இப்போதுள்ள சமாதான ஒப்பந்தம் விரைவில் உடைந்து பெரும் அழிவு ஏற்படும். அந்த அழிவில் நாங்கள் பங்கேற்கத் தயாரில்லை. ஆனால் உங்கள் போராட்டத்துக்கு நாங்கள் பங்கம் ஏற்படுத்த மாட்டோம்’’ என்று தெரிவித்திருந்தோம்.
இதேவேளை அந்தக் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த சிலர் நாங்கள் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவதை கடுமையாக எதிர்த்திருந்தார்கள். விடுதலைப் புலிகள் ஒரு தடவை பேசிவிட்டு பின்னர் பேசாமல் இருந்ததுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கே: – யார் எதிர்த்திருந்தார்கள்?
ப – :அவர்களின் பெயரைக் கூற விரும்பவில்லை. அதனைக் கூறி குழப்பத்தை உருவாக்க விரும்பவில்லை. நாங்கள் கூட்டமைப்பில் போட்டியிட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய சிலரே அவ்வாறு செயற்பட்டார்கள்.
கே: – அப்படியானால் 2011ஆம் ஆண்டு கூட்டமைப்பில் இணைந்த போது அதனை எவரும் எதிர்க்கவில்லையா? உங்களை இணைப்பதில் எதிர்ப்பு இருக்கவில்லையா?
ப: – 2011ஆம் ஆண்டுச் சூழலைப் பார்க்கவேண்டும். நாங்கள் வெளியே நிற்பதால் ஒற்றுமையைக் குழப்பிக் கொண்டிருப்பதாக இருக்கக் கூடாது. விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழ் மக்கள் மிகப் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டபோது நாங்கள் இணைவது நல்லது என்று பலரும் கூறினார்கள். கூட்டமைப்பிலிருந்த பங்காளிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் நேரடியாக என்னுடன் பேச்சு நடத்தினார்கள். அவர்களும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. நாங்களும் நிபந்தனைகளை விதிக்கவில்லை. இணைந்து கொண்டோம்.
அழிவு பற்றிய ஆரூடம்
கே: – சமாதான உடன்படிக்கை முறிவடைந்து பெரும் அழிவு நிகழும். அதில் நாங்கள் பங்கேற்க விரும்பவில்லை என்று எந்த அடிப்படையில், புலிகளின் பிரதிநிதிகளுக்கு கூறியிருந்தீர்கள் ?
ப: – பங்கேற்கவில்லை என்பதன் அர்த்தம் பொறுப்பேற்க விரும்பவில்லை. இன்றைய இந்த அழிவில் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கின்றது. மறைமுகமாக நாங்களும் பொறுப்புத்தான். அதை மறுக்கமாட்டேன். ஆயுத இயக்கங்களாக இயங்கியவர்கள், சாத்வீக வழியில் இயங்கியவர்கள் அனைவரும் பொறுப்பு. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாத்திரம்தான் பொறுப்பு என்று சொல்லிவிட்டு எவரும் செல்ல முடியாது.
சமாதான உடன்படிக்கைக் காலத்தில் இரண்டு தரப்புக்களும் தங்களைப் பலப்படுத்துவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். இது மக்களுக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும் என்பதை புலிகளின் பிரதிநிதிகளுக்கு விளங்கப்ப டுத்திக் கூறினோம்.
அரச தரப்பின் ஆயத்தங்களை எங்களால் ஊகிக்கக் கூடியதாக, அறியக் கூடியதாக இருந்தது. அதே நேரத்தில் சர்வதேச ரீதியில் புலிகளுக்கு எதிரான முனைப்பு இருந்தது. போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் என்று சகல நாடுகளும் இலங்கை அரசுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவியிருக்கின்றார்கள். புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறியிருக்கின்றார்கள்.
அந்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் 11 ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டன. அந்தக் கப்பல்களை அழிப்பதற்கான உளவுத் தகவல்களைக் கொடுத்தது மாத்திரமல்ல, அவற்றை அழிப்பதற்கு வெளிநாடுகள் உதவியதாக நாங்கள் இப்போது அறிகின்றோம். இப்படியான ஆபத்துக்கள் இருக்கின்றன என்பதை முன்கூட்டியே கூறியிருந்தோம்.
நாங்கள் கூறியதை புலிகள் அலட்சியமாக எடுத்துக் கொண்டார்கள். காற்றுப் புக முடியாத இடத்திலும் நாங்கள் புகுவோம் என்று பொட்டமானின் பிரதி நிதி எங்களுக்குச் சொல்லி விட்டுச் சென்றார். புலிகள் மாத்திரமல்ல, தமிழ் மக்களுடைய சாபக்கேடே, எங்களை நாங்களே மிகைப்படுத்திக் கொள்வதுதான்.
கோத்தாபயவைப் பற்றி
புலிகளுக்கு எச்சரித்தோம்
கே: – சமாதான ஒப்பந்த காலத்தில் அரசு தன்னைப் போருக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தது என்று கூறியிருந்தீர்கள். அரச தரப்பு சமாதான ஒப்பந்தத்தில் இதயசுத்தியுடன் செயற்படவில்லையா?
ப: – அரச தரப்பு இதய சுத்தியுடன் செயற்படவில்லை. பேச்சுக்களில் ஒரு முன்னெடுப்புக் கிடையாது. இழுத்தடித்துச் சென்றார்கள். விடுதலைப் புலிகளின் முக்கியமான பின்னடைவுக்குக் காரணம் 2005ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல்.
2005ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற போர்களின்போது இராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றுக்கு இடையில் ஒருங்கிணைவு, தகவல் பரிமாற்றம் என்பவை இருக்கவில்லை. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்ட பின்னர், பாதுகாப்பு அமைச்சின் செயலராக கோத்தாபய பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் முப்படைகளையும் ஒருங்கிணைத்தார். அவருக்கு அதற்கான முழு அதிகாரமும் இருந்தமையால், அதனைச் செய்ய முடிந்தது. செய்துவிட்டுச் சொல்லலாம், சொல்லிவிட்டும் செய்யலாம் என்ற நிலைமை அவருக்கு இருந்ததால், இவற்றைத் தடையின்றிச் செய்தார். அப்போதும்கூட புலிகளுக்குச் சொன்னோம். “மிக அலட்சியமாக எடுக்காதீர்கள். கோத்தாபய வந்திருக்கின்றார். அவரும் உங்களைப் போன்ற (புலிகள்) சிந்தனை யில் இருக்கின்றார். போர்தான் என்ற ஒற்றைச் சிந்தனையில் – மாத்திரமே – இருக்கின்றார்” என்று சொன்னோம்.
கே: – அப்படிப்பட்ட ஒருவர் இப்போது ஜனாதிபதியாகியிருக்கின்றார். இனி என்ன நடக்கப் போகின்றது?
ப: – அவர் ஒரு விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றார். அதிகாரப் பரவலாக்கம் தேவையில்லாத விடயம். அவருடன் நான் அன்று தொடக்கம் கதைத்து வந்ததிலிருந்து தெரிந்த விடயம். மற்றையது சிறிய நாட்டுக்குள் இவ்வளவு அரசியல் கட்சிகள் தேவையில்லை. இரண்டு மூன்று கட்சிகள் மாத்திரம் இருந்தால் போதும் என்ற நிலைப்பாடும் அவருக்கு இருக்கின்றது.
அவர் சிறந்த சிங்களத் தேசியவாதி. சிறுபான்மையினர் இந்த நாட்டில் வாழட்டும். அவர்களுக்குத் தேவையான அபிவிருத்திகளைச் செய்தால் சரி. இந்தச் சிந்தனை கோத்தாபயவுக்கு மாத்திரமல்ல, பல சிங்களத் தலைவர்களுக்கு இருக்கின்றது. சிங்களத் தேசியவாதம் இருப்பதில் பிழையில்லை. எப்படி எங்களுக்கு தமிழ்த் தேசியவாதம் இருக்கின்றதோ, அதேபோன்று அவர்களுக்கு சிங்களத் தேசியவாதம் இருக்கின்றது. ஆனால், எங்களை ஆக்கிரமிக்கின்ற தேசிய வாதமாக அது இருக்கக் கூடாது. எங்களைத் தாக்குகின்ற நிலைமைக்கு வரக்கூடாது. அவர்கள் எங்களின் சுதந்திரத்தைப் பறிக்கின்ற நிலைப்பாடுகளைத்தானே எடுக்கின்றார்கள்.
சிறுபான்மையினருக்குச் சாதகமாக
கோத்தாபய செயற்படார்
கே: – ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கோத்தாபய மீது தமிழ் மக்களுக்கு இருந்த பயம் குறைவடைந்து செல்கின்றதா? கோத்தாபயவின் நிர்வாகம் சார் அதிரடி நடவடிக்கைகளால் அவரை ஏற்றுக் கொள்ளும் போக்கு ஏற்படுகின்றதா?
ப:நிர்வாக ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் அவர் திறமாகச் செயற்படுவார் என்று நான் முன்னரே எதிர்பார்த்தேன். சிறுபான்மையினருக்குச் சாதகமான அரசியல் நடவடிக்கையை அவர் எடுக்க மாட்டார். 70ஆண்டுகளாக தமிழ் மக்கள் சமஷ்டிக்கும் அல்லது தனிநாட்டுக்கும் ஆதரவு கொடுத்துள்ளார்கள். தமிழர்களுக்கு நிர்வாகம் வேண்டும், பாதுகாப்பு வேண்டும் எல்லாம் வேண்டும். அதற்கு முதன்மை கொடுக்கமாட்டார்கள். அரசியல் தீர்வுக்குத்தான் முதன்மை கொடுத்திருந்தார்கள், கொடுக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் அதிகாரப் பகிர்வைப் பற்றிக் கதைத்திருக்கின்றன. மக்கள் நூறுவீதம் அதிகாரப் பகிர்வுக்காகத்தான் வாக்களிக்கின்றார்கள்.
கே: – இந்தப் போக்கில் கோத்தாபய சென்று கொண்டிருந்தால், எதிர்காலத்தில் அவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், அவரை எப்படிக் கையாளப் போகின்றீர்கள் ?
ப: – நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவர்களுக்கு கிடைக்கும் என்று நான் நம்பவில்லை.
அவர் தப்பித்தவறி அவ்வாறு பெற்றால், மிகப் பெரிய ஆபத்து இருக்கின்றது. தமிழர்களுக்கு மாத்திரமல்ல, சிங்கள புத்திஜீவிகள், சிவில் சமூகத்தவர்களுக்கும் ஆபத்து இருக்கின்றது.
தமிழர்களுக்கான தீர்வில் அக்கறை கொண்ட சிங்கள சிவில் சமூகத்தினர் என்னிடம் பேசும்போது, தீர்வைப் பற்றி கோத்தா தரப்பு அக்கறையில்லாமல் இருக்கின்றது. அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், 13ஆவது திருத்தச் சட்டத்தையே, மாகாணசபை முறைமையையே இல்லாமலாக்கும் நிலைப் பாட்டை எடுக்கலாம்.
கோத்தா என்ன நினைக்கின்றாரோ தெரியவில்லை. ஆனால் அவரைச் சுற்றி உதய கம்பன்பில, விமல் வீரவன்ச போன்றவர்கள் இருக்கின்றார்கள். இராணுவத் தளபதிகள் இருக்கின்றார்கள். அவர்கள் கோத்தாபய 13ஆவது திருத்தத்தை ஒழிக்கும் விடயத்தை முன்னெடுக்க ஊக்குவிக்கலாம். இந்த ஆபத்தை எனக்கு முதன் முதலில் சொன்னதே சிங்களப் புத்திஜீவிகள்தான்.
ஆனால், மஹிந்த அரசியல்வாதி. அவருக்கு சர்வதேச அழுத்தங்ளைப் பற்றி நன்றாகத் தெரியும். முக்கியமாக 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வது இந்தியாவுடன் எவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.
கூட்டமைப்பு தனியே
தேர்தலுக்கான கூட்டா?
கே: – கூட்டமைப்புக்குள் தேர்தல் காலங்களில் பூதாகாரமாக பிரச்சினைகள் வெடிக்கின்றன. தேர்தல் காலங்களில் சில அரசியல் கட்சிகள் கூட கூட்டமைப்பிலி ருந்து வெளியேறியிருக்கின்றன. அப்படியானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெறும் தேர்தலுக்கான அரசியல் கூட்டா?
ப: – தேர்தல் காலங்களில் பிரச்சினைகள் எழுவதற்குக் காரணம் உண்டு. கூட்டமைப்பு கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், இப்படியான பிரச்சி னைகள் எழாது. தனித்தனியாக கட்சியாக இருக்கின்றோம். தனித் தனிக் கட்சிகளாக இருக்கின்றபோது, நாங்கள் ஒவ்வொரு கட்சியும், எங்களது கட்சிகளைப் பலப்படுத்தவே பார்ப்போம். பலப்படுத்தவேண்டும் என்ற சிந்தனையில் கட்சிகள் கூடுதலான ஆசனங்களைக் கேட்பது வழமை. நாங்கள் எங்கே எங்களால் வெல்ல முடியும் என்பதைக் கவனத்தில் எடுத்தே, ஆசனங்களைக் கேட்போம்.
எங்கள் கூட்டுக்குள் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லாவிட்டால், அந்தக் கூட்டு வளரக் கூடிய கூட்டு அல்ல. கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும், அது பற்றிக் கதைக்கப்பட வேண்டும், பின்பு தீர்க்கப்பட வேண்டும். அந்தக் கட்சிதான் சரியான வளர்ச்சியைக் காணும். சம்பந்தன் அண்ணையின் கருத்துக்கு நாங்கள், மற்றைய கட்சிகள் கடும் எதிராக இருந்தாலும், அவர் உடனடியாக குழம்பிப் போய்விட்டது என்று நிற்கமாட்டார். ஒரு கூட்டம், இரண்டு கூட்டம், ஐந்து கூட்டம் என்று பல கூட்டங்கள் வைத்து, தனது கருத்தை ஒருவாறு எங்கள் மீது திணிப்பார் அல்லது ஏற்க வைப்பார்.
கே: – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடைவைச் சந்திக்கும் என்று ஆரூடம் கூறியிருந்தீர்கள். அதற்கான காரணம் என்ன?
ப: – மக்கள் மத்தியில் அதிருப்தியான நிலைப்பாடு. முக்கியமாக தீர்வு விடயத்தில் சரியான நிலைமை இயலவில்லை.நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக மக்கள் பலர் நினைக்கின்றார்கள். இவைகள் ஒரு காரணம்.ஆனால் இது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தவறான அபிப்பிராயம்.
கே: – மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றீர்கள். ஏன் சரியானதை மக்களிடம் சொல்லவில்லை?
ப: – அரசுடன் ஒரு விடயத்தை நாங்கள் செய்யும் போது மக்கள் அப்படிக் கருதுவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அதைச் சரி செய்வதற்கு நாங்கள் சில விடயத்தை மக்களுக்குச் சொல்லப் போகின்றபோது, தெற்கில் அது பிரச்சினையை ஏற்படுத்தி விடும்.
உதாரணத்துக்கு ஒரு விடயத்தைச் சொல்கின்றேன். பண்டா, செல்வா ஒப்பந்தம் மூலம் தமிழர்களை பண்டாரநாயக்கவுக்கு விற்று விட்டார்கள் என்று அப்போது தமிழ்க் காங்கிரஸின் ஜி.ஜி.பொன்னம்பலம் சொல்லித் திரிந்தார். இதற்காக தமிழ் அரசுக் கட்சியினர், ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களைக் கூறி மக்களைத் தெளிவடையச் செய்தார்கள். தமிழ் அரசுக் கட்சியினர் தமிழ் மக்களுக்குச் சொன்னதை வைத்து தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர்.ஜெயவர்தன கண்டி யாத்திரை போனார். குழப்பங்களை ஏற்படுத்தி அந்த ஒப்பந்தத்தை கிழித்துப் போடச் செய்தார்.
சில விடயங்களில் நாங்கள் பக்குவமாக நடக்க வேண்டும். மக்களுக்கு இந்த விடயங்கள் தெரியவருகின்றபோது தெரிந்து கொள்ளட்டும். அதற்கு முன்னர் அந்த விடயங்களை குழப்பி விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம், இருக்கிறோம்.
மஹிந்தவுடன் பேசலாம்
கே: – நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அரசமைப்பு முயற்சி தொடருமா?
ப: – தேர்தலின் பின்னர் மஹிந்தவே பெரும் பாலும் பிரதமராக வருவார். அவர் அரசியல்
வாதி. கோத்தாபய போன்றில்லை. அவருடன் நாம் பேசக் கூடிய வாய்ப்பு வரும்.
ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு,கிழக்கில் நாம் சிதறிப் போனால் அது அரச தரப்புக்குத்தான் வாய்ப்பாகிவிடும். வடக்கு – கிழக்கிலிருந்து நான்கு அல்லது ஐந்து கட்சிகளைப் பிரதிநிதித்து வப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்தால், அரச தரப்பு அதையே சாட்டாக வைத்து விடயத்தை இழுத்தடித்து விடும்.
வடக்கு கிழக்கிலிருந்து வந்த கூட்டமைப்புடன் மாத்திரம் பேசத் தேவையில்லை. அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச வேண்டும் என்று இப்போதே அரச தரப்பினர் சொல்கின்றார்கள். தேர்தலில் நாங்கள் சிதறிப் போனால் அரசுக்கு அது இன்னமும் இலகுவாகிவிடும். அதனால்தான் கூட்டமைப்பை உடைக்கக் கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கின்றோம்.
அதிகாரப்போட்டியே காரணம்
கே: – கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணி கூட மாற்று அணியாக, ஓரணியாக இல்லையே?
ப: அவர்களும் கொள்கை ரீதியைக் காட்டிலும், ஆசன ரீதியாகவே சிந்திக்கின்றார்கள். விக்னேஸ்வ ரன் ஐயாவைக் காண்பித்து தாங்கள் படியில் ஏறிவிடலாம் என்றும், சிலர் சிந்திக்கின்றார்கள். இப்படியான மனப்பாங்குகளுடன் இருப்பதால்தான் அவர்களால் சரியாக இயங்க முடியாமல் இருக்கின்றது.
புலிகள் இருந்த காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு, ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோவுடனும் வேலை செய்ய முடியும். இப்போதுதான் அவருக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். பெரிய பிரச்சினையாகத் தெரிகின்றது. தமிழ் மக்கள் பேரவையில், எழுக தமிழில் நான், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் ஆகியோர் கடைகடையாகச் சென்று ஆதரவைத் திரட்டினோம்.
அந்தத் தருணத்தில் சேர்ந்து வேலை செய்ய முடியும். இப்போதுதான் சுரேஷுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாது என்கிறார்கள் . ஏனென்றால், அவர் இயக்கம் என்று சொல்லுகின்ற நிலைமை.அதிகாரப் போட்டிதான் இதற்குக் காரணம்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு
புளொட்டும் காரணமா?
கே: – காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் முன்னிலை யில் சாட்சியமளித்தோர் பலர் புளொட் அமைப்பால் தங்கள் உறவுகள் கடத்தப்பட்டதாக தெரிவித்தனர். அரசிடம் பொறுப்புக் கூறலை வலியுறுத்தும் நீங்கள் இந்த விடயத்தில் எப்படிப் பொறுப்புக் கூறப் போகின்றீர்கள் ?
ப: – அரசியலுக்காக குற்றம் சுமத்தவேண்டாம். ஆதாரங்களுடன் கூறினால் அதற்கு நாம் ஒத்துழைக்கத் தயார். எங்கள் இயக்க உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இப்போதும் சொல்கின்றேன், எங்கள் இயக்க உறுப்பினர்களால் கடத்தப்பட்டார்கள் என்று நம்பினால், அதை உரிய ஆதாரங்களுடன் கொண்டு வந்து நிரூபியுங்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்போம்.
கே: – நீங்கள் ஆயுத அமைப்பில் இருந்தவர். தமிழ் மக்களின் விடிவுக்காக ஆயுதம் ஏந்தியவர். இப்போதைய அரசியல் சூழல், கோத்தாபயவின் நடவடிக்கைகள் மீண்டும் தமிழர்களை ஆயுதம் தூக்குவதற்கு தள்ளக்கூடுமா?
ப: கோத்தாபய அரசுக்கு எதிரான அதிருப்தி, உணர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஆயுதப் போராட்டத்துக்கான ஆரம்பமாக இது இருக்கும் என்று இதுவரையில் நான் நம்பவில்லை.
நன்றி : திலீப் (உதயன் பத்திரிகையின் சஞ்சீவி)