இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் அறவிடப்படாமல் விசா அனுமதி வழங்கும் முறை நீடிக்கப்பட்டுள்ளது.நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது 48 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக இந்த வசதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

10. இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு கட்டணம் அறவிடப்படாமல் விசா அனுமதி வழங்கும் முறையை நீடித்தல்.

48 நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு சுதந்திர விசா விநியோகிக்கும் வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 6 மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கென 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக, சுதந்திர விசா வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் இந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு கட்டணம் அறவிடப்படாமல் விசா வழங்கும் முறைக்கான வேலைத்திட்டம் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த 48 நாடுகளுக்காக 2020 பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2020 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் மேலும் 3 காலப்பகுதிக்காக நீடிப்பதற்கு சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.