யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும்,அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று (18) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு வாய்த்தர்க்கமாக மாறி அடிதடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வாள்வெட்டுக் குழுவினர் சென்று கல்லூரியில் அடாவடித்தனங்களில் ஈடுபட்டனர்.

இதில் ஆசிரியர்கள் மூவர் காயமடைந்ததுடன் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான சம்பவங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருந்தது.

இந் நிலையிலையே அந்த வன்முறைக் குழுவின் சம்பவங்களைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் பாதுகாப்பை உறுதியப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் இன்று காலை மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்படிருக்கும் அச்ச உணர்வைப் போக்கி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு மகஐர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது