முகாம்களில் தங்கியிருப்பவர்கள் தமது வாக்குகளை, தாம் தங்கியிருக்கும் இடங்களிலேயே அளிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அமைக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த வாக்களிப்பு நிலையங்கள் நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு அமைய அமைக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இன்று வவுனியாவில் நடைபெற்ற சர்வதேச தாய்மொழி தின நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எந்தவொரு நபருக்கும் இரு இடங்களில் வாக்களிக்க முடியாது. 2 இடங்களில் பதிவும் செய்ய வாய்ப்புமில்லை. மிகவும் அரிதாக இரண்டு இடங்களில் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் 2 இடங்களில் வாக்களிக்கும் வாய்ப்பு எவருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.