யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து இதுவரை காலமும் குறிப்பிட்ட சில தினங்கள் மாத்திரம் இந்தியாவிற்கான விமான சேவை இயங்கி வந்த நிலையில் எதிர்வரும் 27ம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் யாழ் வர்த்தக சங்க உப தலைவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யாழ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்தியாவிற்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்கள் கடந்துள்ளன. எனினும் அந்தச் சேவைகள் சில தினங்கள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பலரதும் கோரிக்கைகளுக்கு அமைய பயணிகளுக்காக இந்த சேவை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி முதல் நாளாந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.