வவுனியா – வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரி, அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களாலும் பெற்றோர்களாலும், இன்று (26), மீண்டும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனால், அப்பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.

 குறித்த பாடசாலையில் ஆசிரியர் பற்றாகுறை நிலவுவதாகத் தெரிவித்து, திங்கட்கிழமை (24), பெற்றோர்களும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை (25), பெற்றோர்கள், தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமையால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (26) காலை, ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கக் கோரி, நெளுக்குளம் – நேரியகுளம் பிரதான வீதிக்கு முன்பாக ஒன்றுகூடிய பெற்றோர்களும் மாணவர்களும், வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்
மு. இராதாகிருஷ்ணனுடன் பெற்றோர்கள் முரண்பட்டனர்.

அத்துடன், அவரது வாகனத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது.

 வெள்ளிக்கிழமைக்கு (28) முன்னர், குறித்த பாடசாலைக்கு ஆசிரியர்களை நியப்பதாக, வலயக் கல்விப் பணிப்பாளர் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

 குறித்த போராட்டம் காரணமாக, நெளுக்கும் – நேரியகுளம் வீதிக்கான போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.