சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிலும் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,912 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,026 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 3039 பேர் பலி ஆகியுள்ளதுடன், 89,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.