இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுலா மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள 38 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாட்டில் தங்கியுள்ளனர்.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஷெஹான் சுமனசேகர இதனை கூறியுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நாளாந்தம் 4 தடவைகள் எமிரேட்ஸ் நிறுவனம் விமான சேவைகளை முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் வரை இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாகவும்  தெரிவு செய்யப்பட்டுள்ள சில நாடுகளுக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவை தனது விமான போக்குவரத்தை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.