கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களாக, கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்கள், அதி அபாய வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மேற்படி மாவட்டங்களுக்கு, மறுஅறிவித்தல் வரை ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

மேற்படி மாவட்டங்களில், பொருள்களைக் கொள்வனவு செய்வதற்காக மக்கள் அதிகளவு பொதுஇடங்களில் ஒன்றுகூடினர் என்றும் இதனால் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனைக் கருத்திற்கொண்டே, மேற்படி மாவட்டங்களை அதி அபாயவலங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாளை முதல், அத்தியாவசியமான பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில், சில வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும்,  ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லொறி, வான், ஓட்டோ, மோட்டார் சைக்கிள் போன்ற  வாகனங்களில் பொருள்களைக் கொண்டு சென்று விநியோகிப்பதற்கும்  ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில், இந்த வாகனங்கள் சேவையில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.