கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த,

கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை என்றும் மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தாலும் இலங்கையில் இப்போதைக்கு 7 நோயாளிகள் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்றும் கூறினார்.

எனவே, இலங்கையின் வைத்திய நடவடிக்கைகள் சிறந்த முறையில் உள்ளது என்றும் ஆனால், இவை அனைத்தையும் இப்போதே கைவிட்டு விட முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, இப்போது கடைபிடிக்கப்படும் இறுக்கமான சட்ட நடவடிக்கைகளை, தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என்றும் ஊரடங்குச் சட்டத்தை, தொடர்ந்தும் பிறப்பிக்கவேண்டியது கட்டாயமானதாகவும் என்றும் அவர் கூறினார்.

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் காரணத்தாலேயே, தங்களால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என்றும் அவ்வாறு ஊரடங்குச் சட்டத்தை தளர்த்த வேண்டுமாயின் இப்போது கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களையும் அவர்களுடன் தொடர்புகளை பேணிய ஏனைய நபர்களையும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைத்து அவர்களை மேலும் பரிசோதனை செய்து அவர்கள் ஆரோக்கியமான நிலையில் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.