தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் 2ஆம் கட்ட நடவடிக்கை நாளை இடம்பெறவுள்ளது.நுகேகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 500 பேர் நாளை காலை 7 மணிக்கு நுகெகொடை பொலிஸ் மைதானத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி ஜாலிய செனவிரட்ன தெரிவித்தார்.

மேல்மாகாண ஆளுநரின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் முக்கிய கவனம்செலுத்தப்பட வேண்டிய கர்ப்பிணிப் பெண்கள் , பெண்கள், பிள்ளைகள் சிகிச்சைக்காக கொழும்பிற்கு வந்து நீண்டகாலமாக தமது வீடுகளுக்கு திரும்பமுடியாதவர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

தமது சொந்த இடங்களுக்கு செல்லும் இவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள்.

மேல்மாகாண ஆளுநரின் இந்த வேலைத்திட்டத்தின் இணைப்பாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் செயல்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய செனவிரட்ன மேலும் தெரிவித்தார்.