அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் நாளை (11) முதல் திறக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயணிப்பதற்காக மாத்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்து சேவையை தனிப்பட்ட பயணங்களுக்காக பயன்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.

அருகிலுள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தொற்று பரவாத வகையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கம் என்ற வகையில் நாளை நாட்டை திறக்கும்போது இரண்டு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக வழமைக்கு கொண்டுவருவதற்கு தனியார் பிரிவை ஆரம்பிப்பது முதலாவது நோக்கம்.

பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு அரச செயற்பாடுகளை வலுப்படுத்துவது இரண்டாவது நோக்கம் எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தம்மால் அறிமுகம் செய்துள்ள விடயங்களை மக்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் அரச மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.