வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 129 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்தவகையில், வெலிசறை கடற்படையினருடன் தொடர்புகளைப் பேணிய நிலையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவிசாவளை, நுவர, குருநாகல், நாவலம்பிட்டி, கொழும்பு, கண்டி ஆகிய பகுதிகளைச் சோந்த 129 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களது தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து விடுவிக்கப்பட்பட்டனர்.

இதன்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த 129 பேரையும் இராணுவத்தின் பாதுகாப்புடன் 6 பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்