உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரை,ஜுன் மாதம் 1ஆம் திகதி வரை  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

அத்துடன், நீதிமன்றப்  பிணையில் சென்று, நீதிமன்றில் சமுகமளிக்காத 5 பேருக்கும் பிடியாணை பிறப்பித்தார்.

வெவ்வேறு  வழக்கு இலக்கங்களைக் கொண்ட, வெவ்வேறு மாவட்டங்களின் சிறைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த 68 பேரின் வழக்குகள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில், நேற்று (18)   விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் காரணமாக, சந்தேகநபர்களை நீதிமன்றுக்கு அழைத்து வரமுடியாத காரணத்ததல், நீதிபதியின் ஆலோசனைக்கமைய,  சிறைச்சாலை அதிகாரிகளின்  ஏற்பாட்டில்  காணொளி மூலம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

2019, ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை, நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்த  64 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்கப்பட்டு வந்தனர்.

இதேவேளை,  சஹ்ரான் சகோதரி, அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் உள்ளிட்டோரும் இவர்களில் உள்ளடங்குகின்றனர்.