பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய 05 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் தற்போதைய நிலையில்  அச்சிடப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்க அச்சுத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் இரு தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

அனுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் தற்போது தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை விரைவில் அச்சிட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, பொதுத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் முதற்தடவையாக தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இன்று (16) கூடவுள்ளனர்.

தபால் மூல வாக்களிப்புக்கான திகதியை தீர்மானிப்பதற்காகவும் மற்றும் கடந்த தினங்களின் இடம்பெற்ற தேர்தல் ஒத்திகையின் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடவும் தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இவ்வாறு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.