
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
‘உரிமைகளை கனவாக்கி உயிர்களை உரமாக்கிய உன்னத உறவுகளே உங்கள் நினைவுடன் உரிமைக்காக நாமும் உண்மையாக என்றும்’ எனும் தொனிப்பொருளிலான 31ஆவது வீரமக்கள் தினத்தின் இறுதிநாளின் ஆரம்ப நிகழ்வாக
கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றிவைத்ததோடு, நினைவுச்சுடர் ஏற்றல், மௌன அஞ்சலி, மலர் அஞ்சலி என்பன இடம்பெற்று அஞ்சலிக் கூட்டமும் இடம்பெற்றது.
நிகழ்வில் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம், பொருளாளர் க.சிவநேசன், உபதலைவர்கள் வி.ராகவன், ஜி.ரி. லிங்கநாதன், கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் பா.கஜதீபன், கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் க.சிவலிங்கம்,
கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தார்கள்.






















