கொழும்பு கிழக்கு முனைய செயல்பாடுகளை வெளிநாட்டிற்கு ஒப்படைக்கக் கூடாது என்று கோரி கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த பணி புறக்கணிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கால்டன் இல்லத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்தையின் அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்படுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. துறைமுக கிழக்கு முனையத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்சினை தொடர்பாக மொத்தம் 23 துறைமுக தொழிற்சங்கங்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காது அதனை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவருமாறு கோரி 23 தொழிற்சங்கங்கள் இணைத்து கடந்த சில நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன்காரணமாக கொழும்பு துறைமுகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.