நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் தினமிரவு வாக்குப் பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய தேர்தல் அதிகார பகுதியில் தலா இரண்டு பேர் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்கும், வாக்கெண்ணும் நிலையக வளாகத்தில் தமது பிரதநிதிகளை வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பின் பின்னர் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் அல்லது சாலை ஓரங்களில் நிற்பதை தவிர்த்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார். வாக்களிப்பின் பின்னர் வாக்குசீட்டுகளை உரிய முறையில் மடித்து வாக்கு பெட்டியினுள் போடப்பட வேண்டும். இதனையடுத்து முடிந்தளவு விரைவாக வீடுகள் அல்லது சேவை நிலையங்களுக்கு திரும்ப வேண்டும். வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

அனைத்து சுகாதார நடைமுறைகளும் பின்பற்றபட்ட முழுமையாக வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அனைவரும் அச்சமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்க முடியுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் கூறியுள்ளார்.