முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில், 21ஆம் திகதியன்று தீக்காயங்களுக்குள்ளான குடும்பஸ்தர், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடைய செய்யது முகமது சிராஜ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 21ஆம் திகதியன்று, மேற்படி குடும்பஸ்தர் வீடொன்றுக்குச் சென்று, பால் காய்ச்சும்போது, மேல் தட்டில் இருந்த மண்ணெண்ணை போத்தல் தவறுதலாக அடுப்பு மீது விழுந்ததில், அவர் மீது தீ பரவியுள்ளது.

இதையடுத்து, அவர் மாஞ்சோலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, நேற்று சகோதரன் திட்டியதால் தனக்குத்தானே தீ மூட்டிய குடும்பப் பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான ரஜீவ்காந்த் நந்தினிதேவி (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.