கொழும்பில் ஆகக்கூடிய வாகன நெரிசல் காணப்படும் இடமாக கருதப்படும் கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 3 மேம்பாலங்களை அமைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது. இந்த பாலங்களை அமைப்பதற்காக 6 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் உத்தராநந்த மாவத்தையில் ரயில் பாதைக்கு மேலாக மேம்பாலத்தை நிர்மாணித்தல். கொம்பனித் தெரு பிரதேசத்தில் உத்தராநந்த மாவத்தை மற்றும் நீதிபதி அக்பார் மாவத்தை ஊடாக ரயில் பாதை அமைந்துள்ளதால் அலுவலக நேரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இந்நிலைமையை தவிர்ப்பதற்காக மேம்பாலத்தை நிர்மாணித்து ஒரு திசையில் வாகனங்கள் செல்லும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், இதன்கீழ் 03 மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்காக பொருத்தமான தகுதியைப் பெறும் உள்ளுர் ஒப்பந்தக்காரர்களிடமிருந்து கேள்வி மனுக்களை கோருவதற்காக பெருந்தெருக்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.