கொரோனாவிலிருந்து மீண்ட, ஹொங்கொங்கைச் சேர்ந்த 30 வயது ஆணொருவருக்கு நான்கு மாதங்களின் பிறகு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ள ஹொங்கொங் பல்கலைகழகம் அவரது உடம்பில் தொற்று ஏற்படுத்திய வைரஸ் -ன் மரபணுவை ஆய்வு செய்துள்ளது. அதில் முதல் முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ் மற்றும் இரண்டாவது முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ்-ல் காணப்படும் மரபணுக்களில் மாற்றங்கள் உள்ளதாக ஹொங்கொங் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் இரண்டாவது முறை ஏற்படுவது மிகவும் அபூர்வம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவிலிருந்து மீண்டுவந்தவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று இது வரை நம்பப்பட்டது. ஆனால் எத்தனை காலம் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று அறுதியிட்டு எந்த நாடும் இதுவரை கூறவில்லை என்றாலும் குறைந்தது மூன்றுமுதல் ஆறு மாதங்கள்வரை எதிர்ப்பு சக்தி உடம்பில் இருக்கும் என நம்பப்பட்டது. அதன் பிறகு எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல குறையலாம் என்று கூறப்பட்டது.

கொரோனா வைரஸ்கள் மரபணுவில் மாற்றம் செய்துக்கொள்வதால், ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பி சி ஆர் பரிசோதனையில், வைரஸ்-ன் இறந்த செல்கள் உடலில் இருந்தாலும், பொசிடிவ் காட்டும் என்பதால் இதுவரை இரண்டாவது முறை தொற்று ஏற்பட்டதற்கான அறிவியல் பூர்வமான சான்று இல்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள ஆதாரத்தின்படி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன்மூலம் இயற்கைதான எதிர்ப்பு சக்தி கிடைத்தாலும் மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.