சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க நேற்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். ’19ம் திருத்தத்தின் ஊடாக நாட்டை பிரச்சினைக்கு உள்ளாக்கினார்கள் என்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை வெறுமனே அரசியல் ரீதியான ஆணைக்குழுக்கள் மாத்திரமே. அப்போது பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்பட்டமையும் அரசியல் நோக்கம் கருதியது. இவ்வாறான சிக்கல் நிறைந்த 19ஐ நீக்கி 20ஆவது கொண்டுவரப்படும்.

உண்மையாகவே 19ம் திருத்தத்தின் ஊடாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபலவின் அதிகாரத்தை குறைத்து ரணிலின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. 19ஐ கொண்டுவர தனிப்பட்ட நோக்கமே காரணம். ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே 19 இன் மூலம் இரட்டை குடியுரிமையாளர்கள் அரசியலில் ஈடுபட முடியாது என கூறப்பட்டது. அது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியை இலக்கு வைத்து செய்யப்பட்டது.

அதாவது ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்படவும், மைத்திரியின் அதிகாரத்தை குறைத்து ரணில் பலம்பொறுந்தியவராக மாறவே 19ஆது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை ஒழித்து 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படும். அதற்காகவே மக்கள் பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள். அதேபோல் புதிய தேர்தல் முறையொன்றை மக்கள் கோரியுள்ளனர்.

ஆகவே ஜனாதிபதியும், பிரதமரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பர். இதற்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். சிறுபான்மை கட்சிகளே கடந்த மகாண சபை தேர்தல் முறையையும் பிரச்சினையாக்கியுள்ளனர். ஆனபடியால் சிறுபான்மை கட்சிகள் அதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தும் கூச்சலிட்டும் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.