விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்குவது சிறந்தது என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகதிர் மொகமட் (Mahathir bin Mohamad) தெரிவித்துள்ளதாக டீடீஊ செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொஹிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தாம் கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் LTTE இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாசிற்கு சிறந்தது என ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது மகதிர் மொகமட் கூறியுள்ளார். பிற நாடுகளைப் போல் மலேசியாவும் எந்தவொரு குழுவையும் ‘தீவிரவாதிகள்’ என்று இலகுவாக முத்திரை குத்திவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை எனக்கூறிய அவர், அவர்களின் பிரச்சினை இலங்கையில் நடந்தது என்பதுடன் மலேசியாவிற்கு அதில் தொடர்பில்லை என்றும் கூறினார். மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் மகதிர் மொஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகள் இயக்கத்தை இன்னமும் தீவிரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என அக் கடிதத்தில் தாம் குறிப்பிட்டதாக மகதிர் மொகமட் தெரிவித்துள்ளார். இதேவேளை, தீவிரவாத இயக்க பட்டியலில் இருந்து புலிகள் இயக்கத்தை நீக்குவது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி மலேசிய நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.