தமிழீழ போராட்டத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உபதலைவரும், அவ் அமைப்பின் இராணுவ தளபதியுமான தோழர் மாணிக்கதாசன், மற்றும் அவருடன் மரணித்த தோழர் இளங்கோ, தோழர் வினோ ஆகியோரின் இருபத்தோராவது நினைவுதினத்தை முன்னிட்டு, வவுனியா எங்கும் பரவலாக அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.செப்டம்பர் மாதம் 2ம் திகதி 1999ம் ஆண்டு வவுனியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ‘புளொட்’ தளபதி மாணிக்கதாசன், படுகொலை செய்யப்பட்ட 21வது நினைவு ஆண்டாகும். ஆற்றல், துணிவு, மதிநுட்பம் நிறைந்த தளபதி, என்றும் நினைவு கூர வேண்டிய வீர தளபதி.

இன்று நில அபகரிப்பு, பலாத்கார விகாரை அமைத்தல் என்பனவற்றை தனது ஆளுமைக்கு உட்பட்ட வவுனியா மண்ணில் அன்று தகர்த்தெறிந்து தமிழர் அடையாளத்தை காத்து நின்ற தளபதி. தனது ஆற்றல்மிகு செயல் வடிவத்தின் மூலம் வவுனியா எல்லைப் புறங்களில் பல்வேறு தமிழர் கிராமங்களை உருவாக்கி தமிழர் நிலபரப்பையும் தமிழர் அடையாளத்தையும் பாதுகாத்து நின்ற ‘புளொட்’ முக்கியஸ்தர்களில் என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டிய தளபதியே இவர்..

நினைவில் உள்ள வித்தியாசமான சகோதரர்கள் இருவர்!
‘மக்கள் விடுதலை முன்னணி’த்தலைவர் (ஜே.வி.பி) ரோகண விஜேவீரா பற்றிய சிங்களத்திரைப்படம் பற்றிய காணொளியைப் பார்த்ததும் கூடவே ரோகண விஜேவீராவுடன் கைது செய்யப்பட்டுப் படையினரால் கொலை செய்யப்பட்ட கட்சியின் உபதலைவரான உபதிஸ்ஸ கமநாயக்கவின் ((Upatissa Gamanayake) நினைவும் தோன்றியது. கூடவே அவரது தாயாரின் சகோதரியின் மகனான இன்னுமொருவரின் நினைவும் தோன்றியது.

உபதிஸ்ஸ கமநாயக்க சிங்கள சமுதாயத்தின் வர்க்க விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, அரச படையினரால் கொலை செய்யப்பட்டால், அவரது அன்னையின் சகோதரியின் மகனோ இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காய் ஆயுதம் தாங்கிப் போரிட்ட ஒருவர். ஆரம்பத்தில் தமிழ்ப்புலிகள் அமைப்பில் இணைந்தவர், பின்னர் அது தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), விடுதலைப் புலிகள் என்னும் அமைப்புகளாகப் பிரிந்த போது தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டவர்.

பின்னர் தன் இறுதிகாலத்தில் அவ்வமைப்பின் இராணுவத் தளபதியாகவும், பிரதித் தலைவராகவுமிருந்தவர். அவர் வவுனியாவிலிருந்த கழகத்தின் முக்கிய பாசறையான லக்கி ஹவுஸுல் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.. அவரே ‘கண்ணாடி’ என அன்புடன் அழைக்கப்படும் மாணிக்கதாசன்.

மாணிக்கதாசன் என்றதும் அவரது இராணுவச் செயற்பாடுகள் மற்றும் அவை காரணமாகவெழுந்த விமர்சனங்கள் தாம் முதலில் நினைவுக்கு வரும். விடுதலைக்காக ஆயுதம் தூக்கிய அனைத்து அமைப்புகளிலும் இவை போன்ற விமர்சனங்களுள்ளன.

‘தோழர் சின்ன மெண்டிஸ் போராளிகளுடன் மிகவும் நட்புரீதியாகப் பழகுவார். மாணிக்கதாசனும் அவ்வாறே மிகவும் நட்புரீதியாகப் பழகுவார். அத்துடன் மிகவும் வேடிக்கையாகவும் உரையாடுவார்.’ இவ்விதமான அவரது ஆளுமையினால் அக்காலகட்டத்தில் கழகத் தோழர்களின் அன்புக்குரியவராகவுமிருந்தார்.

இன்றும் இயக்க முரண்பாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் சேறடித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். ‘இவர்கள் எல்லோரும் (இவர்கள் எவ்வமைப்புகளைச் சா(சே)ர்ந்தவரர்களாக இருந்த போதிலும்) வேடிக்கைக்காகத் தம் சுயநலன்களுக்காக ஆயுதங்களை ஏந்தியவர்கள் அல்லர். சமூக, அரசியல் முரண்பாடுகளின் விளைவாக, அவற்றுக்கான தீர்வுகளை நாடி, உறவுகளை, தம் சொந்த நலன்களைத் துறந்து, போராட்டத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டவர்கள்.

உள்முரண்பாடுகளை, புறமுரண்பாடுகளை, சமூகச் சீர்திருத்தங்களை இவர்கள் அனைவரும் கையாண்டதிலேற்பட்ட பாதக, சாதக விளைவுகளைப் பற்றிய எவ்வித சுயபரிசோதனைகள் எதுவுமின்றித் தொடர்ந்தும் கண்களை மூடிக்கொண்டிருப்பதில் பயனெதுவுமில்லை. சுயபரிசோதனையினைப் பக்கச்சார்புகளற்றுச் செய்ய வேண்டிய காலகட்டம் இக்காலகட்டம். நடந்தவற்றைக் குறை, நிறைகளுடன் அணுகுவோம். பாடம் படிப்போம். கூடவே நினைவு கூர்வோம். (சுவிஸ் ரஞ்சன்).