அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவும், அதனை தோல்வியடைய செய்வதற்கும், நிபந்தனைகள் இன்றி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 2இல் கூடி இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண ஊடாக இதுதொடர்பான யோசனை கொண்டுவரப்பட்டதுடன், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க அதனை வழிமொழிந்துள்ளார்.

19ஆவது திருத்த்தில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக 1910 வரை அதனை கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ’19ஐ முன்னோக்கி’ என்ற தொனிப்பொருளில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்று நாளை பிற்பகல் 04 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.