சம்பள ஏற்றம் வழங்கப்படாமை, சம்பளம், மீளாய்வு செய்யப்படாமை, உள்ளக வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபையின் புதிய அரச பொது ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்றைய தினத்திலிருந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நகரசபை வாயிலில் ஒன்றுகூடிய அவர்கள் பதாதைகளை ஏந்தியவண்ணம் நேற்றுக் காலை 7 மணிக்கு தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சந்தித்து கலந்துரையாடியதுடன் இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

குறித்த உறுதி மொழிகளிற்கமைய இன்று தமது போராட்டத்தை முடித்து கொள்ளவிருந்த நிலையில் நகரசபை செயலாளரின் தன்னிச்சையான முடிவினால் தமது போராட்டத்தை மீண்டும் தொடர்வதாக போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.