சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார் என்று நம்பப்படும் பயங்கரவாதி சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையினை மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது. குறித்த வழக்கு விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்று கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.ரிஸ்வானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதன்போது, நீதிமன்றத்திற்கு சாராவின் தாயார் வருகை தந்திருந்தார்.

இதன்போது, கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வுப் பிரிவிற்கு அவரை அழைத்துச் சென்று மரபணு பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில், மேற்குறித்த விடயம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக மேலதிக அறிக்கைகளை தாக்கல் செய்து மீண்டும் சாராவின தாயாரை அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்தகால விசாரணைகளில் சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா என்ற புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என மன்றில் அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி தெரிவித்திருந்தமையும், பின்னர் அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக சிஐடி அதிகாரிகள் வெளிப்படுத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.